MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: சார் நான் ஒரு பில்டர். 2350 ச.அடியில் ஆறு கிச்சன் கொண்ட ஜி + 3 புராஜெக்ட் கட்ட திட்டமிட்டேன். தரை தளம் ( 6 x 2) 12 கார் பார்கிங்க். மூன்று அடுக்கில் தலா இரண்டு வீடுகள் . இது தான் என் பிளான்.. ஆனால் பொறியாளர் வந்து மூன்றாவது அடுக்கில் ஒரு வீட்டை கட்டி மீதி இடத்தை காலியாக விட வேண்டும் என்கிறார். இப்படி செய்தால் 5 வீடுகள் தான் கட்ட முடியும். எனவே, தரை தளத்தில் கார் பார்கிங்க் இடத்தை குறைத்து ஒரு வீட்டை கட்டி கூடுதலாக தாருங்கள் என்றால் முடியாது என்கிறார். நீங்கள் சொல்லுங்கள் 2350 ச.அடியில் தரை தளத்தில் வீட்டை கட்ட முடியாதா? கட்டினால் அப்ரூவல் கிடைக்காதா? புராஜக்ட் அணுகு சாலை அகலம் 30 அடி, ஆகும். அமைந்துள்ள இடம் : செங்குன்றம். - சந்தானம், பில்டர்.செங்கல்பட்டு


Answer:

கட்டுநர் திரு. சந்தானம் அவர்களே, நீங்கள் கட்டுமானத் துறையில் இருப்பதால் உங்களுடைய மனைப் பரப்பளவிற்கு ஏற்ப அதிலிருந்து (1.75 மடங்கும் - 30 அடி அகலமுள்ள அணுகுசாலை அல்லது 2 மடங்கு - 40 அடி அகலமுடைய அணுகு சாலை வரை தான்). மொத்தப் பரப்பளவு உடைய வீடுகளைக் கட்ட முடியும்.
எனவே, இந்த கணக்கீட்டின்படி உங்களுடைய மூன்றாவது மாடியில் ஒரு குடியிருப்பு மட்டும் கட்டுவதற்கு மட்டும் தான் குடழழச ளுpயஉந ஐனெநஒ அனுமதிக்கிறது. எனவே தான் உங்களுடைய பொறியாளர் அவ்வாறு தெரிவிக்கிறார். நீங்கள் 2350 சதுர அடியில் தரைத்தளத்தில் ஒரு குடியிருப்பை கட்டினால் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டைக் கட்டமுடியாது. எனவே, உங்களுடைய பொறியாளர் சொல்வது போல கட்டினால் தான் நகராட்சியின் ஒப்புதல் கிடைக்கும்.



Q: சார் . நான் எஞ்ஜினியர் வைத்து தான் வீடு கட்டினேன். வழக்கமாக வீடு கட்டி முடித்த பின்பு சிறு சிறு விரிசல்களும், வெடிப்புகளும் சுவரின் ஒரு பக்கம் ஏற்படுவது இயற்கை தான்.. ஆனால் எங்கள் வீட்டின் மொட்டை மாடி தடுப்பு சுற்று சுவரில் சுவரின் அகலம் முழுக்க (முக்கால் அடியும்) 1 செ.மீ அளவில் இரண்டாய் பிளந்து மேலிருந்து கீழாக 2 அடி நீளத்திற்கும் இருக்கிறது.இந்த வகை கட்டட சேதம் எதனால் ஏற்படுகிறது? எப்படி சரிசெய்வது? கட்டடத்தின் வயது எட்டு ஆண்டுகள். ஆகிறது.. - சம்பந்த உடையார்.,. ஜவுளிக்கடை வியாபாரம். கவரப்பேட்டை


Answer:

கவரப்பேட்டை திரு.  சம்பந்தம் அவர்களே. உங்களுடைய வீட்டைப் பற்றி முழுமையான தகவல்கள் தரப்படவில்லை. இந்தக் கட்டடம் பாரம் தாங்கும் செங்கல் சுவர்களைக் கொண்டதா அல்லது உறுதிபெறு கான்கிரீட்டால் ஆன பலகம், விட்டம் மற்றும் தூண்கள் உடைய சட்ட கோப்பு அமைப்பா? நீங்கள் சொல்வதிலிருந்து சாதராண சுட்ட செங்கற்கள் (Burnt Clay Bricks) சிமெண்ட் கலவை 1:5 / 1: 6 உள்ள செங்கல் கட்டுவேலையாகச் செய்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். 

 

உங்களுடைய மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் விரிசல்கள் இருப்பதைக் கண்டு பயப்படாதீர்கள். மொட்டை மாடி கைப்பிடிச் சுவர்கள் கீழே பிடிப்போடும் மேலே எந்தவிதப் பிடிப்புமின்றி கட்டப்பட்டவை இப்படியிருக்கும் செங்கல் சுவர் இழுவிசை (Tension) தாங்காது. இயற்கையாகவே ஏற்படும அதிர்வுகளாலும், லாரி போன்ற ஊர்திகளின் ஓட்டத்தால் ஏற்படும் அதிர்வுகளாலும் கைப்பிடிச் சுவரில் விரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே, Cera Poly Crack Filler எனும் வேதியில் கலவையை அல்லது  Polymer Mortar-யைக் கொண்டு அந்த விரிசல்களை அடையுங்கள். மேலும், விவரங்களுக்கு உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டுமான பொறியாளரைத் தொடர்பு கொண்டு அவரிடம் விளக்கம் பெறுங்கள்.



Q: கான்கிரீட் வலிமையாக்க நீங்கள் அவ்வப்போது பலவித அட் மிக்சர்களை எங்களுக்கு பரிந்துரைக்கிறீர்கள். ஆனால் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கேட்டால், அப்படியெல்லாம் செலவழித்து காசை வீணாக்காதீர்கள். எங்கள் நிறுவன சிமெண்டை பயன்படுத்தினால் நீங்கள் எந்த வித அட் மிக்சர்களையும் பயன்படுத்த தேவையில்லை என்கிறார்களே? - பொறி.கு.கணேஷ்., ஆவடி


Answer:

கான்கிரீட்டைப் பல்வேறு பயன்பாட்டுக்காக வேதியல் சேர்மானங்களை (Chemical Admixtures - Superplasticiser, Waterproofing, Bonding Agents & Corrosion inhabitors) முதலியவற்றைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இவற்றினுடைய பயன்பாடுகள் பற்றி பல கட்டுநர்களுக்கும், பொறியாளர்களுக்கும் இன்னும் முழுமையாக தெரியவில்லை. 

 

சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பவர்கள் தகுதியும், திறமையும் பெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் அல்ல. அவர்களுக்கு சிமெண்ட்டைக் கூடுதல் விலைக்கு விற்பதே நோக்கமாக இருக்கிறது. மேலும், வேதியியல் சேர்மானங்களினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. இதுதான் உண்மை நிலை. கான்கிரீட்டில் நல்ல பயன்களை பெற வேதியியல் சேர்மானங்கள் சேர்ப்பது காசை வீணடிப்பது அல்ல. செலவை விட கூடுதல் பயன்கள் கிடைக்கும். பல ஆண்டுகளுக்கு வலிமையோடும், உறுதியோடும் கட்டடங்கள் நிலைத்து நிற்க வேதியியல் சேர்மானங்களின் பயன்பாடு மிக மிகத் தேவை. எனவே, சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்வதைப் புறந்தள்ளுங்கள்.



Q: இண்டர் லாக் பிரிக்குகள் பற்றி நிறைய கட்டுரைகள் படிக்கிறேன். ஆனால் எதுவுமே எனக்கு முழுமையாக இல்லை. என் கேள்விகள் அ. இண்டர் லாக் பிரிக்குகள் கொண்டு பாரம் தாங்கும் தாய்ச் சுவர் அமைக்க முடியுமா? ஆ. இண்டர் லாக் பிரிக்குகள் எக்ஸ்டிரியர் அல்லது இண்டீரியர் பார்ட்ஷியன், காம்பவுண்ட் இதில் எதற்கு ஏற்றது? இ. இண்டர் லாக் பிரிக்குகள் கொண்டு சுவர் அமைப்பதற்கு வழக்கமான வேலையாட்களே போதுமா? - பொறி. பிரகாஷ், சேலம்.


Answer:

இண்டர் லாக் பிரிக் கொண்டு பாரம் தாங்கும் தாய்ச் சுவர்களையும், வீட்டினுள் பிரிப்புச் சுவர்களையும் வீட்டு வெளியில் சுற்றுச் சுவர்கள் அமைப்பதற்கும் Interlock brick ஏற்றவை. இந்த Interlock brick கொண்டு வீடுகள் கட்டுவதற்கு வழக்கமான வேலையாட்களை விடக் குறைவான வேலை ஆட்களே போதுமானது. இதன் பாரம் தாங்கும் வலிமை குறைவாக இருப்பதால் Interlock brick கொண்டு G+1 கட்டடம் மட்டும் கட்டமுடியும். அதற்கு மேலுள்ள கட்டடங்களைக் கட்டமுடியாது. கட்டுமானத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் (Precast Concrete Solid Block, Porotherm Bricks முதலியவை) எளிதாகவும், குறைந்த விலையில் கிடைக்கும் போது Interlock brick களின் தேவை ஏற்படவில்லை. மேலும், Interlock brick கட்டுமானம் பற்றி அறிய எங்களின் கட்டுமானப் பொறியாளர் செப்டம்பர் 2020 இதழைப் படியுங்கள்.



Q: “அதிக டிஎம்டி கம்பிகள்’ வலிமையை தருமா? வீரப்பன் சார். டிஎம்டி கம்பிகள் பயன்படுத்தும் போது ஒரு பொறியாளாராகிய நான் சொல்வதை எனது கான்ட்ராக்டர் முதலாளி கேட்பதில்லை. அதிக எண்ணிக்கையாலான கம்பிகள்., அதிக விட்டமுள்ள கம்பிகளை பயன் படுத்தச் சொல்கிறார். அது தான் அதிக தரமானது, உறுதியானது, நீடித்து உழைக்கும் என்று கூறுகிறார். வீட்டு உரிமையாளர்களும் அப்படித்தான் கேட்கிறார்கள். நான் எப்படி செயல்படுவது? - பொறி.கு.கணேஷ்., ஆவடி


Answer:

 பொறிஞர் கணேஷ்; அவர்களே, உங்களுடைய அனுபவம் பல பொறியாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கும் அது தொடர்கிறது. உங்களுடைய ஒப்பந்தகாரர் முதலாளி ஒரு தகுதி பெற்ற பொறியாளர் அல்ல. அவருக்கு உறுதிபெறு காங்கீரிட்டில் மிகச்சரியாக எவ்வளவு கம்பிகள் போட வேண்டும் என்று தெரியாது. கட்டட மேஸ்திரியும் கம்பி வளைப்போரும்  பல ஆண்டுகளாக என்ன செய்து வந்தார்களோ அதையே உங்களுடைய முதலாளியும் சொல்லுகிறார். டிஎம்டி கம்பிகள் Fe 415 / Fe 500 ; இவை பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மெல்லெஃகுக் கம்பிகளை (Mild Steel Rebars) விட கூடுதலாக 1.85 / 2 மடங்கு அதிகமான பாரத்தைத் தாங்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாத காரணத்தால் அதிக விட்டமுடைய மிகுதியான கம்பிகளைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள் இது தவறு. அதிக விட்டமுடைய மிகுதியான கம்பிகளைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் கிடையாது. மாறாக, பாரம் மிகுதியாகும் போது முதன் முதலில் கான்கிரீட் நொறுங்கி பாதிப்புகள் ஏற்படும். 

 

எனவே, தேவைக்கு 5 சதவீதம் குறைவான கம்பிகளைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. தண்டச் செலவும் குறையும். பொறியாளராகிய நீங்கள் Under Reinforcemed Concrete & Over Reinforced Concrete உறுப்புகளில் பாரம் மேல் வரும் போது ஏற்படும் விளைவுகளை அவர்கட்கு விளக்கமாக சரியாக சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இதுதான் ஒரே வழி.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000